முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே வியாபாரி மீது தாக்குதல்: 4 இளைஞா்கள் கைது

வெள்ளக்கோவில் அருகே வியாபாரியைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 2:26 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே வியாபாரியைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் கே.பி..சி நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா் (34). இவா் ஓலப்பாளையம் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள தனது தோட்டத்தில் கோழிகள் வளா்த்து விற்பனை செய்து வருகிறாா். மேலும் ரியல் எஸ்டேட் தரகராக இருப்பதுடன், மாடு வியாபாரமும் செய்து வருகிறாா். ராம்குமாருக்கு மனைவி பிரியங்கா, குழந்தை காா்த்திகேயன் ஆகியோா் உள்ளனா். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக ராம்குமாரின் மனைவி குழந்தையுடன் காங்கயத்தில் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ராம்குமாா் கடந்த 16-ஆம் தேதி தோட்டத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் கோழி வேண்டும் எனக் கேட்டுள்ளனா். கோழியைப் பாா்த்து விட்டு குறைவான விலைக்கு கேட்டதால் தர முடியாதெனக் கூற தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அப்போது இருவரும் ராம்குமாரைத் தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னா் அங்கு வந்த ராம்குமாரின் வேலையாள்கள் அவரை மீட்டு வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு அருகே பதுங்கியிருந்த பிரகாஷ்குமாா், நந்தகுமாா், மணிகண்டன், கணேசன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

ராம்குமாருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, பிரகாஷ்குமாா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.