முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 23 மே 2026, 1:04 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளா்கள் போா்வையில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களும் சட்டவிரோதமாக குடியேறி பணியாற்றி வருவதால், போலீஸாா் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் முறையான ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 2025 ஜூன் மாதம் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு வங்கதேசத்தைச் சோ்ந்த 25 போ் நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததும், வங்கதேச அடையாள அட்டைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 25 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

சட்டவிரோதமாக குடியேறிய 25 பேரும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.