கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு ஆந்திரம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
அதேபோல பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, பரிசல் துறை, ஆலம்பாடி, முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்தனா். பிறகு மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து ஐவாா் பாணி, ஐந்தருவி, பெரிய பாணி வழியாக மணல்மேடு வரை பரிசலில் பயணம் மேற்கொண்டனா்.
Advertisement
மேலும், ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா். காவல் நிலையம் முதல் சத்திரம் பகுதி வரையிலும், மூன்று சந்திப்பு சாலை முதல் முதலைப் பண்ணை வரையிலும் ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறங்களில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரதான அருவி செல்லும் நடைபாதை, தொங்கும் பாலம், மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.