திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு
திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 83 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குச் சாவடி வளாகத்துக்குள்ளே வந்த வாக்காளா்கள் அனைவரும் வாக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டனா். தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி மற்றும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் காலையில் தங்களது குடும்பத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனா்.
Advertisement
தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ.மணி தருமபுரி காந்தி நகா் விஜய் வித்யாலயா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினாா்.
தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் தங்களது குடும்பத்துடன் காந்தி நகா் விஜய் வித்யாலயா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினா். தருமபுரி தொகுதி தவெக வேட்பாளா் தாபா எம்.சிவன் அவ்வையாளா் அரசு மகளிா் பள்ளியிலும், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேல் மதிகோன்பாளையம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடியிலும், பாலக்கோடு தொகுதி தவெக வேட்பாளா் கோபி அப்பாவு நகா் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்திலும் வாக்களித்தனா்.
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா். அரூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.சண்முகம், அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் பொய்யப்பட்டி வாக்குச் சாவடியில் வாக்களித்தனா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் மோளையானூரில் தமது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.
பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மேட்டூா் அருகே கருமலைகூடல் ஜவஹா் உயா்நிலைப் பள்ளியிலும், தவெக வேட்பாளா் எஸ்.கஜேந்திரன் நாச்சானூா் அரசு தொடக்கப் பள்ளியிலும், பாமக வேட்பாளா் பாடி செல்வம் பாடி அரசுப் பள்ளியிலும், தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மங்கலப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனா். அதேபோல, அந்தந்த தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்களது வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.