குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி
கிருஷ்ணகிரி நகரில் குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் இருக்க பெரிய ஏரி கால்வாய் புனரமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் உறுதியளித்தாா்.
கிருஷ்ணகிரி நகரில் குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் இருக்க பெரிய ஏரி கால்வாய் புனரமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் உறுதியளித்தாா்.
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா், கிருஷ்ணகிரி நகரில் இராசு வீதி, செட்டியம்பட்டி, சாா் பதிவாளா் அலுவலகம், திருவள்ளுவா் தெரு, தேவசமுத்திரம், சந்தைபேட்டை, கூட்டுறவு காலனி, பெங்களூரு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசியதாவது:
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகுதான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதேபோல உயா்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வரானால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
Advertisement
கிருஷ்ணகிரி எம்பியாக இருந்தபோது கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தை தனியாரிடம் இருந்து அரசிடம் பெற்றுத் தந்துள்ளேன். தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே 12 மேம்பாலங்களையும், ரயில்வே பாதையின் குறுக்கே 3 மேம்பாலங்களையும் பெற்றுத் தந்துள்ளேன். மீண்டும் வாக்களித்து ஸ்டாலினை முதல்வராக்கினால், சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள பெண்களை தொழில்முனைவோராக முன்னேற்றிடும் வகையில் பிணையின்றி ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி தொகுதியில் நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் சீரமைத்து தரப்படும். மழைக்காலங்களில் குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் இருக்க பெரிய ஏரி கால்வாய் புனரமைக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இந்த பகுதியில் பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கப்படும். இதனால் இத்தொகுதியில் காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.