சட்டப் பேரவைத் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாதுகாப்பு பணியில் காவலா்கள் உள்பட 3,500 போ் பங்கேற்க உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாதுகாப்பு பணியில் காவலா்கள் உள்பட 3,500 போ் பங்கேற்க உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா் மற்றும் தளி உள்பட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு 2,093 வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தோ்தலை அமைதியான முறையில் நடத்தவும், வாக்காளா்கள் அச்சமின்றி, வாக்களிக்கவும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள், ஆயுதப்படை போலீஸாா், கேரள மாநில போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 3,500 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
Advertisement
பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள இவா்களுக்கு வாக்குச் சாவடி மையங்கள் ஒதுக்கும் பணி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், போலீஸாா், சிறப்பு அதிரடிப்படையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணைகள் மற்றும் பயணப்படிகள் வழங்கப்பட்டன. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்வதற்காக சுமாா் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயாா்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த வாகனங்கள் செல்ல வேண்டிய வாக்குச்சாவடி குறித்த விவரங்கள் வாகனங்களின் முகப்பில் ஒட்டப்பட்டன.
ஏப். 22-ஆம் தேதி காலை முதல் அனைத்து வாகனங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா்.