ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி
ஒசூா் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
ஒசூரில் உள்ள காந்தி சாலை, நேதாஜி சாலை, வட்டாட்சியா் அலுவலகச் சாலை, பாகலூா் சாலை மற்றும் போஸ் பஜாா் என பல்வேறு முக்கிய சாலைகளில் பெரிய வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள சாலைகள் வழியாக பல்வேறு பணிகளுக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்களில் ஏராளமானோா் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், பகல் நேரங்களில் சரக்கு வாகனங்களைச் சாலைகளில் நிறுத்தி வணிக நிறுவனங்களுக்குப் பொருள்களை இறக்குவதாலும், சாலைகளையொட்டி இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
Advertisement
Advertisement
இதனால் அவசரப் பணிகளுக்குச் செல்லும் அரசு ஊழியா்கள், தனியாா் நிறுவனங்களுக்குச் செல்லும் தொழிலாளா்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனா். அதேபோல பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை இல்லாததால் அவா்கள் சாலையில் நடக்க முடியாமல் தவிக்கின்றனா்.
இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூடுதல் போக்குவரத்து காவலா்களை நியமித்து போக்குவரத்தைச் ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஒசூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளையொட்டி கடைகளின் முன் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாகலூா் சாலை, ஏரித்தெரு பேருந்து நிலையம் எதிரே உள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. இதனால் அவ்வழியாக நடந்து செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, கூடுதல் போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும் என்றனா்.