அனுமதி பெறாமல் இயங்கிய மனநலக் காப்பகத்துக்கு "சீல்': 8 மன நோயாளிகள் மீட்பு
நாமக்கல் அருகே அனுமதியின்றி செயல்பட்டுவந்த மனநலக் காப்பகத்துக்கு அதிகாரிகள் புதன்கிழமை "சீல்' வைத்தனர். அங்கிருந்து 8 மனநோயாளிகள் மீட்கப்பட்டனர்.
நாமக்கல் அருகே அனுமதியின்றி செயல்பட்டுவந்த மனநலக் காப்பகத்துக்கு அதிகாரிகள் புதன்கிழமை "சீல்' வைத்தனர். அங்கிருந்து 8 மனநோயாளிகள் மீட்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டி அருகே கெஜகொம்பை கிராமத்தில் ராணி என்பவர் தன் வீட்டில் மன நலம் பாதித்தவர்களை வைத்து காப்பகம் நடத்தி வருவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல், அரசு அனுமதியும் பெறாமல், சுகாதார வசதி இல்லாமல் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களை மீட்க வேண்டும் எனவும் தொலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவின் பேரில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் நடமாடும் சிகிச்சை வாகனத்துடன் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதில், கெஜெகோம்பை கிராமத்தில் 2 அறைகள், 2 குளியல் அறைகள், 1 கழிவறை உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் ராணி (எ) எப்சிபா 8 மனநலம் குன்றியவர்களை வைத்து அவர்களுக்கு உணவு மட்டும் அளிப்பதும், மற்ற நேரங்களில் அவர்கள் சுற்றிவரும் நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும், மனநலம் பாதித்தவர்கள் வெளி வளாகத்தில் சுற்றித் திரிவதும், ஒரே அறையில் தரையில் படுத்து உறங்குவதும், போதிய மருத்துவ வசதி இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
அரசு விதிகளின்படி கட்டட உரிமைச் சான்று, பொது சுகாதார சான்று, மருத்துவப் பயிற்சியாளர்கள், மருத்துவ வசதி, மாற்றுத் திறனாளிகள் உரிமை பாதுகாப்புச் சட்டம் பதிவு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் மன நலக் காப்பகத்துக்கான அனுமதி மற்றும் அரசின் அங்கீகாரம் போன்ற எந்த அனுமதியுமின்றி இந்த காப்பகம் இயங்கி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கிருந்த மனநலம் பாதித்தவர்கள் 8 பேரை மீட்டு, அரசு நிதி உதவியுடன் செயல்படும் ராசிபுரம் அணைக்கும் கரங்கள் மனநலக் காப்பகத்தில் சேர்த்தனர்.
அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட கட்டடத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி "சீல்' வைத்தனர். தொடர்ந்து, அதன் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி தலைமையிலான குழுவினரை ஆட்சியர் பாராட்டினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.