மலைக் கிராம மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள்: ஆட்சியர்
கொல்லிமலையில் உள்ள மகளிரின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது
கொல்லிமலையில் உள்ள மகளிரின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம்.
கொல்லிமலை வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கூட்டுப்பண்ணைய திட்டம் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் கொல்லிமலை வட்டம், செம்மேட்டில் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
விழாவுக்கு முன்னிலை வகித்த சேந்தமங்கலம் எம்எல்ஏசி. சந்திரசேகரன் பேசியது:
கொல்லிமலையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் 100 சதவீதம் மின்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர், ஜாதி சான்றிதழ், மருத்துவ வசதி, நடமாடும் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மலைக் கிராம மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு தரமான மருத்துவ சேவை உறுதி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்களிடம் வீடு, நிலம் ஆகியவற்றை விற்று விடுமாறும், வெளி நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்வதாகவும் ஒரு சிலர் ஆசை வார்த்தை கூறி வருகின்றனர். இத்தகைய நபர்களை யாரும் நம்ப வேண்டாம்.
மலைவாழ் மக்கள் விவசாய நிலங்களை பாதுகாப்பதோடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க 2 மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசியது:கொல்லிமலையில் உள்ள பெண்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், மிளகு மற்றும் காபி பயிர்களை கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யும் வகையில் இங்குள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பல்வேறு தொழில் கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசின் அனைத்துத் துறைகள் சார்பில் மலைவாழ் மக்களுக்கான நலத் திட்டங்களை, மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. வேளாண்மை துறையில் அதிக உற்பத்தியை பெரும் வகையில் கூட்டுப் பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் விவசாயிகள் குழுவாக இணைந்து விவசாய பணிகளை மேற்கொள்ள முடிகிறது. அவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன என்றார்.
விழாவில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மண் வள அட்டைகள், 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46.80 லட்சம் வங்கிக் கடனுதவி, ரூ.20 லட்சம் மானியத்தில் 4 உழவர் உற்பத்தி குழுக்களுக்கு பவர் டில்லர், பிரஸ் கட்டர், மினி டிராக்டர் வழங்கப்பட்டன. அங்கன்வாடி மையங்களுக்கு மரக்கன்று, 200 பேருக்கு எஸ்டி மலையாளி ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர். சுப்ரமணியன், வேளாண்மை உதவி இயக்குநர் டி. அன்புச்செல்வி, வேளாண் அலுவலர் டி.கெüதமன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பெ.சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.