குடிநீரில் டி.டி.எஸ், குளோரின் அளவு குறித்து கண்காணிக்க அரசு செயலர் அறிவுறுத்தல்
குடிநீரில் டி.டி.எஸ், குளோரின் அளவு குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும் என ஊரக
குடிநீரில் டி.டி.எஸ், குளோரின் அளவு குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அரசு முதன்மைச் செயலர் கா. பாலச்சந்திரன் அறிவுறுத்தினார்.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலர் கா. பாலச்சந்திரன் பல்வேறு அரசுத் திட்ட பணி செயல்பாடுகளை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் வட்டம், வசந்தபுரம் ஊராட்சி சின்னவேப்பநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் குடிமைப்பொருள் வழங்கும் பணியை ஆய்வு செய்த அவர், அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகளில் பொருள் விவரங்களை சரிபார்த்தார். இதனைத்தொடர்ந்து வசந்தபுரம் ஊராட்சி, குப்பம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்டக் கிடங்கு அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வசந்தபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், உணவுக்கூடம், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வசந்தபுரம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குடிநீர்த் தொட்டிகளை மாதந்தோறும் 5 மற்றும் 15 ஆம் தேதிகளில் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். குடிநீரில் டி.டி.எஸ் அளவு, குளோரின் அளவு குறித்தும் கண்காணிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி. மாலதி, மாவட்ட வழங்கல் அலுவலர் உ. பர்ஹத் பேகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.