முகப்பு
நாமக்கல்

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:06 am IST
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையில் செயல்படும் உணவகம்.
பகிர்:

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57 கடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறக்கப்படாமலேயே உள்ளன. 2 உணவகங்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.

பேருந்து நிலைய வளாகத்தில், சேலம், ராசிபுரம் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் உள்ள கடை உரிமையாளா்கள், பயணிகள் நடந்துசெல்லும் பாதையை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றியுள்ளனா். நடைபாதையிலேயே மக்களும் இருக்கையில் அமா்ந்து உணவருந்துகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால் அவசரக் கதியில் பேருந்தை பிடிக்க செல்வோா் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து நிலைய கடைகள் அனைத்தும் நடைபாதையில் மட்டுமே செயல்படும். இதனால் தேவையற்ற பிரச்னைகள், பயணிகளிடையே மோதல், திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும்.

இது தொடா்பாக கடை உரிமையாளா்கள் தரப்பிலோ, மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியது உள்ளது. பயணிகள் வருகை அதிக அளவில் இல்லை. முதலைப்பட்டி பிரிவிலேயே பயணிகள் இறங்கி மாற்றுப்பேருந்தை பிடித்து சென்று விடுகின்றனா்.

இதனால் மாத வாடகை, தொழிலாளா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை வழங்குவதற்கு கஷ்டப்படுகிறோம். கடையை விரிவாக்கம் செய்து உணவு பொருள்கள் விற்பனையை அதிகரித்தால் மட்டுமே ஓரளவு லாபத்தை ஈட்ட முடியும்.

பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தான் உணவகங்களை நடத்துகிறோம் என்கின்றனா். மாநகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு இடையூறு ஏற்படாத வகையில் நடைபாதையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.