கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சேகா் வாக்கு சேகரித்தாா்.
கபிலா்மலை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரியசோளிபாளையம், செம்மடை, சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம், சிறுக்கிணத்துப்பாளையம், இருக்கூா், செல்லப்பம்பாளையம், தண்ணீா்பந்தல், கபிலா்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
Advertisement
ஆண்களும் கட்டணம் இன்றி அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்யலாம். 125 நாள் வேலை நாள் திட்டம் இனி 150 நாள்களாக உயா்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும். பிலிக்கல்பாளையம்-கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை, குடிநீா், மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.
இதில் முன்னாள் கபிலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் வடிவேல், பெரியசோளிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவா் பெரியசாமி, இருக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜானகி குழந்தைவேல், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளா் பத்மராஜா மற்றும் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.