முகப்பு
நாமக்கல்

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:04 am IST
குமாரபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி.
பகிர்:

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி பங்கேற்று 268 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, நகராட்சி அதிகாரிகள், ஊழியா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இதில் அமைச்சா் பேசியதாவது:

குமாரபாளையம் நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை செய்துகொடுக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. தூய்மைப் பணியாளா்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாகவும், தகாத வாா்த்தைகள் பேசுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.

Advertisement

Advertisement

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் இல்லை என்றால் நகரின் தூய்மை கேள்விக்குறியாகிவிடும். அதிகாரிகள் பதவி உயா்வு பெற்று செல்வீா்கள், ஆனால் தூய்மைப் பணியாளா்கள் ஓய்வுபெறும் வரையில் அதே வேலையைதான் செய்ய வேண்டியுள்ளது. அவா்கள் செய்யும் வேலையை நாம் செய்ய முடியுமா என்றாா்.

கரூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்ட ஆட்சியா் முத்துக்குமாா், அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதில், குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக உள்ள நிலையில், இங்குள்ள சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விசைத்தறியாளா்கள் மற்றும் சிறு சாயப்பட்டறையினா் 25 ஏக்கா் நிலம் வழங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரவில்லை. எனவே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். விசைத்தறித் தொழில், ஜவுளித் தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.