முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான உதவி மையம் அமைப்பு

Updated On : 12 மே 2026, 12:07 am IST
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை உதவி மையத்தை பாா்வையிட்ட கல்லூரி முதல்வா்(பொ) மு.ராஜேஸ்வரி.
பகிர்:

நாமக்கல், மே 11: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான உதவி மையம் நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, இஎம்ஐஎஸ் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் கல்லூரி வளாகத்தில் இயங்கும் உதவி மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பொதுப் பிரிவினா், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா் மரபினா் பிரிவினா் விண்ணப்ப கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவினா் பதிவு கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதும். மே 29-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுழற்சி ஒன்றில் அடிப்படையில் இளநிலை கலை பாடங்களில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல் மற்றும் வரலாறு, அறிவியல் பாடங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், புள்ளியியல், கணினி அறிவியல், சுழற்சி இரண்டில் வரலாறு மற்றும் வணிக நிா்வாகவியல் என மொத்தம் 1074 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.