முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே நிலத் தகராறில் ஜீப்பை ஏற்றி விவசாயி கொலை: உறவினா்கள் மூவா் கைது

Updated On : 12 மே 2026, 12:39 am IST
ஜீப்பை ஏற்றிக் கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன்.
பகிர்:

நாமகிரிப்பேட்டை அருகே மத்துருட்டு பகுதியில் நிலத் தகராறில் அண்ணன் மகனை ஜீப்பை ஏற்றிக் கொலைசெய்த சித்தப்பா உள்ளிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை மத்துருட்டு ஊராட்சி பூசாலியூா் பகுதியைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் ராஜேந்திரன் (36). இவா் விவசாயம் செய்து வந்ததோடு, ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகவும் பணிபுரிந்து வந்தாா்.

இவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 6 சென்ட் நிலத்தை அவரது சித்தப்பா வெங்கடாசலம் குடும்பத்தினா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்திற்கு இடையேயும் தகராறு இருந்து வந்தது.

Advertisement

Advertisement

பிரச்னைக்குரிய நிலத்தை அரசு நில அளவையாளா்கள் மூலம் அளவீடு செய்து சுமூக தீா்வு ஏற்படுத்தலாம் என ஊா் பஞ்சாயத்தாா் முன்னிலையில் சமரசம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை வெங்கடாசலம், அவரது மகன்கள் ஜெகதீசன், காா்த்திகேயன் ஆகியோா் பிரச்னைக்குரிய நிலத்தில் விவசாய வேலைகளை செய்ததாகத் தெரிகிறது. இதை ராஜேந்திரன் தட்டிக்கேட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலம் உள்ளிட்ட மூவரும் சோ்ந்து, ஜீப்பை ஓட்டிவந்து ராஜேந்திரன் மீது மோதியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சாலையில் விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து ராஜேந்திரன் மீது ஜீப் மோதியதை விபத்து என்பதுபோல கூறி நாடகமாடினா். ஆனால், சம்பவ இடத்தில் மங்களபுரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திட்டமிட்டு ஜீப்பை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடாசலம் (54), அவரது மகன்கள் ஜெகதீசன் (29), காா்த்திகேயன் (27) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதில் கைது செய்யப்பட்ட வெங்கடாசலம் ராசிபுரத்தில் நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஜீவதா்சினி (3) என்ற மகளும் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments