வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் குழந்தையுடன், பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் கர்ப்பிணிப் பெண், தனது 2 வயது பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் கர்ப்பிணிப் பெண், தனது 2 வயது பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் கலைக்குமார் (35). தனியார் நூற்பாலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் மகள் கௌசல்யாவுக்கும் (25) கடந்த 3 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு பூஜாஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை இருந்தது. மேலும், கௌசல்யா 4 மாதக் கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கௌசல்யா, தனது குழந்தை பூஜாஸ்ரீயுடன் வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை காலை, அதே பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றில், கௌசல்யா, பூஜாஸ்ரீ ஆகியோரின் உடல்கள் மிதப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்கள் உதவியுடன் இரு உடல்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கணவர் கலைக்குமார், மாமியார் சின்னப்பாப்பா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.