வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் அவதி
வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில் மாதம் இருமுறை மட்டுமே மேட்டூர் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில் மாதம் இருமுறை மட்டுமே மேட்டூர் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வாழப்பாடி பேரூராட்சியில் அக்ரஹாரம், காமராஜ் நகர், புதுப்பாளையம், மங்கம்மாநகர், கிழக்குக்காடு, காளியம்மன் நகர், வடக்குக்காடு, செல்லியம்மன் நகர், எழில்நகர், குறிஞ்சிநகர், முல்லைநகர், அண்ணாநகர், இந்திராநகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், பெரியசாமிநகர், செல்லப்பன்நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. 15 வார்டுகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பேரூராட்சிக்கு உள்பட்ட ஒட்டுமொத்த பகுதிக்கும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செல்லியம்மன் கோயில், புதுப்பாளையம் பிரிவு சாலை, பழைய ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளில், மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் வரும், சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் தேக்கிவைத்து விநியோகிக்கப்படுகிறது. மாதத்துக்கு ரூ.72 வீதம் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வாழப்பாடி பேரூராட்சிக்கு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு மாற்று குடிநீர்த் திட்டம் ஏதும் செயல்பாட்டில் இல்லாததால், பேரூராட்சிப் பகுதி பொதுமக்கள் அனைவரும் மேட்டூர் காவிரி குடிநீரையே பிரதானமாக நம்பியுள்ளனர். இந்நிலையில், நீரேற்று நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி, மின்தடை, குடிநீர் குழாயில் உடைப்பு போன்ற காரணங்களைக் கூறி, கடந்த இரு மாதங்களாக வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதனால், குடிநீர்த் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, வாழப்பாடி பேரூராட்சிப் பகுதி மக்களின் நலன் கருதி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் கூட்டாய்வு நடத்தி, வாரத்துக்கு இருமுறை அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி, சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: வாழப்பாடி பேரூராட்சியில் மாதத்திற்கு இருமுறை கூட மேட்டூர் காவிரி குடிநீரை விநியோகிப்பதில்லை. மாற்று குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் இல்லாததால், குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இந்நிலையில், குடிநீர் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திடவும் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே, பேரூராட்சியின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் வாரத்துக்கு இருமுறை மேட்டூர் காவிரி குடிநீரை விநியோகிக்க வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான அளவிற்கு குடிநீரை விநியோகிக்காமல் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் தீர்மானத்தை ரத்து செய்து பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.