பசுமை வழிச் சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
பசுமை வழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பசுமை வழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் த.மா.கா. மாவட்டத் தலைவர் டி.காளிமுத்து இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பசுமை வழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அதற்காக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச் சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தச் சாலையில் 3 சுங்கச் சாவடிகள் அமைத்து வசூல் செய்வது தவறானது.
ஆத்தூர் பகுதியில் மேட்டூர் குடிநீர் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இதனை சரிசெய்து முறையான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தளவாய்ப்பட்டியில் வன்கொடுமையால் பள்ளி சிறுமி கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் குற்றவாளிக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும். அந்த சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து, தளவாய்ப்பட்டியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.