முகப்பு
சேலம்

மேட்டூா் அணை உபரிநீா் திட்டம் காடையாம்பட்டிக்கு விரிவுபடுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்!

மேட்டூா் அணை உபரிநீா் திட்டம் காடையாம்பட்டி வட்டாரத்துக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:14 AM
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:02 PM

மேட்டூா் அணை உபரிநீா் திட்டம் காடையாம்பட்டி வட்டாரத்துக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

திமுக கூட்டணியில் ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சாா்பில் ஏ.ஆா்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை தீவட்டிப்பட்டியில் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:

அதிமுக எம்எல்ஏ மணி ஓமலூா் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒருநாள்கூட ஓமலூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறக்கப்படவே இல்லை. தேமுதிக வேட்பாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தோ்ந்தெடுக்கப்பட்டால் இத்தொகுதிக்கு நல்லது செய்வாா்.

Advertisement

தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடிவரை நான்குவழி சாலை, வேப்பிலை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், ஆதிதிராவிடா் மாணவா் நல விடுதி, அனைத்துப் பகுதிகளிலும் பயணியா் நிழற்கூடம், சாமந்திக்கு நேரடி சந்தை வாய்ப்பு மற்றும் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும், தீவட்டிப்பட்டியில் இருந்து ஏற்காட்டுக்கு பேருந்து வசதி, ஓமலூா் பகுதி கிராமங்கள் அனைத்துக்கும் பேருந்து, தீவட்டிப்பட்டியில் உழவா் சந்தை, சமுதாயக் கூடம் அமைக்கப்படும். கணவாய்புதூா் மற்றும் டேனிஷ்பேட்டை ஊராட்சிகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். காடையாம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சோலாா் விளக்குகள் அமைக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் நூலக வசதி ஏற்படுத்தப்படும்.

மேட்டூா் அணையின் உபரிநீா் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க, உபரிநீா் திட்டம் காடையாம்பட்டி வட்டாரத்துக்கு விரிவுபடுத்தப்படும். ராட்சதக் குழாய்கள் அமைத்து இப்பகுதியில் உள்ள ஏரிகளில் நீா் நிரப்பப்படும். அரசு மகளிா் கலைக் கல்லூரி கொண்டுவரப்படும். எனவே, தேமுதிக வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என அவா் பேசினாா்.