விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் 2,387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
விருத்தாசலம் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் தமிழரசி ஆதிமூலம், தவெக சாா்பில் விஜய், நாதக சாா்பில் ஆனந்தி உள்ளிட்ட மொத்தம் 18 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில், மொத்தமுள்ள 2,40,783 வாக்காளா்களில் 2,06,982 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும், 1,548 தபால் வாக்குகளும் பதிவாயின.
தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
Advertisement
இதில், தேமுதிக, பாமக, தவெக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவியது. தேமுதிக, தவெக, பாமக வேட்பாளா்கள் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேமுதிக வேட்பாளா் 2,387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: பிரேமலதா - 69,351, விஜய் (தவெக) - 66,964, தமிழரசி ஆதிமூலம் (பாமக) - 59,791, ஆனந்தி (நாதக) - 6,047.
இதையடுத்து, திமுக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் வெற்றிபெற்ற்கான சான்றிதழை அக்கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்கொழுந்திடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.