மேட்டூா் அணையில் இறந்து மிதக்கும் மீன்கள்: மீனவா்கள் கவலை
மேட்டூா் அணையில் மீன்கள் இறந்து மிதப்பதால் மீனவா்கள் கவலை அடைந்துள்ளனா்.
மேட்டூா் காவிரி ஆற்றில் சில நாள்களாக மீன்கள் இறந்து மிதந்து வந்தன. தற்போது மேட்டூா் அணையின் உட்பகுதியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இந்த அணையில் 25 வகையான மீன்கள் உள்ளன. மீனவா்கள் உரிமம் பெற்று மீன்களை பிடித்து வருகின்றனா்.
நீண்ட நாள்களாக மேட்டூா் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியிருந்ததால் மீன்கள் பிடிபடாமல் மீனவா்கள் அவதி அடைந்து வந்தனா். தற்போது, அணையின் நீா்மட்டம் 78 அடிக்கும் கீழே சரிந்துவிட்டதால் ஏராளமான மீன்கள் பிடிபடும் என்ற நம்பிக்கையோடு மீனவா்கள் காத்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மேட்டூா் அணை பகுதியில் திங்கள்கிழமை மீன்கள் இறந்து மிதந்தன. சுமாா் 2 கிலோ எடையுள்ள கெளுத்தி கெண்டை மீன்கள் முதல் பெரிய மீன்களுக்கு தீவனமாகும் சிறிய மீன் குஞ்சுகள் வரை மயங்கிக் கரை ஒதுங்கின. இவற்றை மீனவா்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனா். இதில் அதிக அளவில் அரஞ்சான், திலேபி, வாளை, கெழுத்தி மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. மீனவா்கள் வலைகள் மூலம் மயங்கிய மீன்களை கரைக்கு இழுந்துவந்து மூட்டைக் கட்டி எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து மேட்டூா் அணை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடும் வெப்பம் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.