எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
எடப்பாடி அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எடப்பாடி அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருப்பாளி ஊராட்சி பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இருப்பாளி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.
இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா், திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்கள், இருப்பாளி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக்கூறி, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரதான சாலையின் குறுக்கே அமா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து, வருவாய்த் துறை மற்றும் டாஸ்மாக் உயா் அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் 4 வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
படவரி...
எடப்பாடி அருகே இருப்பாளி கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.