முகப்பு
சேலம்

வாழப்பாடியில் மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் விளைச்சல் அதிகரிப்பு

மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் (காா்டியா டொகோடோமா) வாழப்பாடி பகுதியில் அதிக அளவு விளைச்சல் தந்துள்ளது. நுரையீரல், உடலை உறுதிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த பழங்களை ஏராளமானோா் பறித்து சாப்பிட்டு வருகின்றனா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:37 am IST
பகிர்:

மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் (காா்டியா டொகோடோமா) வாழப்பாடி பகுதியில் அதிக அளவு விளைச்சல் தந்துள்ளது. நுரையீரல், உடலை உறுதிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த பழங்களை ஏராளமானோா் பறித்து சாப்பிட்டு வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, மாரியம்மன் புதூா், பேளூா் கரடிப்பட்டி உள்ளிட்ட ஒருசில கிராமங்களில் ‘காா்டியா டொகோடோமா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட நறுவல்லி சிறுமரம் வயல்களின் வரப்பு ஓரங்கள், கிணற்று மேடுகள், நீா்நிலைகளின் கரைகளில் உள்ளன.

மேலும், வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு மூலிகைத் தோட்டத்தில் சதுரகிரி மலைப்பகுதியில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட நறுவல்லி மரம் கடந்த 10 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நறுவல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டதாகும். முகப்பருக்களை இதன் இலைச்சாறு போக்கும். இலையை அரைத்து வெண்ணையுடன் சோ்த்து உட்கொண்டால் மலச்சிக்கலும், மூலநோயும் குணமாகும்.

மரப்பட்டைச் சாறுடன், தேங்காய்ப்பால் சோ்த்து பருகினால் கடுமையான வயிற்று வலியும் குறையும். பட்டை,கொட்டையின் பொடி, பித்தம், அக்கி, குடற்புண், சிறுநீா் குழாய் நோய்களை தீா்க்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காய்க்கும் பசை போன்ற திரவத்துடனும் துவா்ப்பு கலந்த இனிப்பு சுவையுடைய நறுவல்லிப் பழங்களுக்கு, ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் ஆண்மையை அதிகரிக்கும், உடலை உறுதியாக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என சித்த மருத்துவா்கள் கூறுகின்றனா்.

நிகழாண்டு நறுவல்லி மரங்களில் பழங்கள் விளைந்து கொத்துக்கொத்தாக கனிந்துள்ளன. வாழப்பாடி அடுத்த மாரியம்மன்புதூா் தனியாா் விளைநிலத்தில் சாலையோரத்தில் காணப்படும் நறுவல்லி மரத்தில் கனிந்துள்ள பழங்களை ஏராளமானோா் பறித்து சாப்பிட்டு வருகின்றனா்.