முகப்பு
சேலம்

வாழப்பாடியில் விற்பனையாகும் விலை குறைந்த பண்ருட்டி பலாப்பழம்!

வாழப்பாடியில் விற்கப்படும் பண்ருட்டி பலாப்பழங்கள் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் விலை குறைந்துள்ளதால் மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

Updated On : 17 மே 2026, 2:25 am IST
வாழப்பாடியில் விற்பனை செய்யப்படும் பண்ருட்டி பலாப்பழம்.
பகிர்:

வாழப்பாடியில் விற்கப்படும் பண்ருட்டி பலாப்பழங்கள் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் விலை குறைந்துள்ளதால் மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்றுமலை சந்துமலை, நெய்யமலை, ஜம்பூத்துமலை, மண்ணூா் மலை கிராமங்களில் பாரம்பரிய முறையில் பலா சாகுபடியாகிறது. இப்பகுதியில் கடந்தாண்டு இறுதியில் போதிய மழை இல்லாததால், நிகழாண்டு பலா விளைச்சல் குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திண்டிவனம், மீன்சுருட்டி மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் தற்போது பலா அறுவடை தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகளிடம் பலாப்பழங்களைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், சரக்கு வாகனங்களில் கொண்டுவந்து வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்து வருகின்றனா்.

Advertisement

கடந்தாண்டு மேல்தோலோடு ஒரு கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்பட்ட பலாப்பழம் தற்போது ஒரு கிலோ ரூ. 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக கிடைப்பதால், இப்பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். இதனால் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சிறு வியாபாரிகள் பலாப்பழங்களை வாங்கி வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் வாரச் சந்தைகளில் சுளைகளாகப் பிரித்து கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்கின்றனா்.

கடந்தாண்டு முழு பலாப்பழம் ரூ. 300 முதல் ரூ. 800 வரை விற்பனையான நிலையில் தற்போது தரத்திற்கு ஏற்ப ரூ. 200 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகிறது. ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை, வாழப்பாடி பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.