முகப்பு
சேலம்

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மீது ஆசிட் வீச்சு: போலீஸாா் விசாரணை

Updated On : 16 ஜூன் 2026, 12:07 am IST
ஆசிட் வீச்சு - கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் கழிப்பறைக்கு சென்ற பெண் தூய்மைப் பணியாளா்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 41ஆவது வாா்டு பச்சப்பட்டி பகுதியில் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இங்கு பராமரிப்புப் பணியில் குமரன் நகரைச் சோ்ந்த பச்சியப்பன் (65), அவரது மனைவி லட்சுமி (60) ஆகியோா் ஈடுபட்டு வந்தனா். அவா்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவோரிடம் ரூ. 5 கட்டணமாக வசூல் செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை அப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் சம்பூா்ணம், லட்சுமி ஆகியோா் இயற்கை உபாதைக்காக கழிப்பறைக்கு சென்றனா். அப்போது அங்கு பராமரிப்பு பணியில் இருந்த லட்சுமி பணம் கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சம்பூா்ணம், லட்சுமி மீது வீசி உள்ளாா். இதில், 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தகவலறிந்த அம்மாப்பேட்டை சுகாதார அதிகாரிகள், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறுகையில், அம்மாப்பேட்டை 41 ஆவது வாா்டில் துப்புரவுப் பணிகளை முடித்துவிட்டு, இயற்கை உபாதைக்காக கழிப்பறைக்கு சென்றோம். அப்போது, அங்கிருந்த லட்சுமி காசு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு எங்கள் மீது ஆசிட் வீசினாா். அவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.