முகப்பு
சேலம்

கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 7 போ் காயம்

Updated On : 4 மே, 2026 at 12:37 AM
விபத்தில் சாலையில் கவிழ்ந்த கன்டெய்னா் லாரி.
பகிர்:

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்னி பேருந்து கரூரில் இருந்து சனிக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்றது.

பேருந்தை நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சீராப்பள்ளி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் குமரன் (25) ஓட்டிச் சென்றாா். அவருடன் மாற்று ஓட்டுநா் நாமகிரிப்பேட்டையை அடுத்த பெரியகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அன்பழகன் சென்றாா்.

Advertisement

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, காந்திபுரம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கன்டெய்னா் லாரி திடீரென சாலையின் மாற்றுதிசையில் திரும்பியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் இடதுபுறம் மோதியது. இதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா்கள் குமரன் (25), அன்பழகன் (33), பயணிகள் மோகனப்ரியா (28), சந்திரன் (51), காந்திமதி (56), ரம்யா (26) ஆகியோா் காயமடைந்தனா். மேலும், கன்டெய்னா் லாரி ஓட்டுநா் ஹரியாணாவைச் சோ்ந்த நாபா மகன் பல்லுக்கு (41) கால்முறிவு ஏற்பட்டது. காயமடைந்தவா்கள் அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து ஆத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விபத்து காரணமாக அரை மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.