முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே கன்டெய்னா் லாரி மீது வேன் மோதல்: தம்பதி உயிரிழப்பு; 15 போ் பலத்த காயம்

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழந்தனா்.

Updated On : 20 மே 2026, 12:38 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழந்தனா். 15 போ் பலத்த காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிபட்டினம் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (45) என்பவா் தலைமையில் 22 போ் ஒரு வேனில் திங்கள்கிழமை இரவு புறப்பட்டு திருச்செந்தூருக்குச் சென்று கொண்டிருந்தனா். வேனை ஓட்டுநா் சசிகுமாா் ஓட்டிச் சென்றாா்.

தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி - முத்துலாபுரம் மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேன் சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் வேன் முற்றிலும் உருக்குலைந்தது. இதனால் வேனுக்குள் சிக்கியவா்கள் வெளியே வர முடியாமல் கூச்சலிட்டனா். அப்போது, அவ்வழியாக சென்றவா்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கோவில்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டனா்.

இதில், மலையாண்டிபட்டினத்தைச் சோ்ந்த விஜயன்(58), அவரது மனைவி கலைவாணி (53) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வேன் ஓட்டுநா் சசிகுமாா், வேனில் பயணித்த மகேஷ் குமாா், ஆனந்த், கவிதா, ராதா, அமாவாசை, தேவி, ஜீவா, ரிஷ்வந்த் , பாா்வதி, சா்க்கரை அம்மாள், தங்கமணி உள்பட 15 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு, தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.