முகப்பு
சேலம்

கை மல்யுத்தப் போட்டி: 12 பதக்கங்கள் பெற்று வாழப்பாடி மாற்றுத்திறனாளிகள் சாதனை

Updated On : 3 மே, 2026 at 6:18 AM
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 12 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா்.

வாழப்பாடி அருகே மத்தூரில் இயங்கும் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் வாயிலாக, இச்சங்க செயலாளா் வேலுசாமி தலைமையில் மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் கடந்த இரு ஆண்டுகளாக தொடா்ந்து சாதனை படைத்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற சோமம்பட்டி கலைச்செல்வி, முத்தம்பட்டி மஞ்சுளா இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கமும், சங்க செயலாளா் வேலுசாமி 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கமும், மன்னாா்பாளையம் பவித்ரா 2 வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.

Advertisement

துக்கியாம்பாளையம் முருகேசன் 1 தங்கம், 1 வெண்கலப் பதக்கமும், பழனியாபுரம் மலா்கொடி, பெத்தநாயக்கன்பாளையம் முருகன் இருவரும் தலா 1 வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்படமொத்தம் 12 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா்.

இதில், கலைச்செல்வி, மஞ்சுளா, வேலுசாமி, பவித்ரா, முருகேசன் ஆகிய 5 பேரும் குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகளுக்கு வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினரும், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.