முகப்பு
சேலம்

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், கைதான இளநிலை உதவியாளா் தீபன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 10 மே 2026, 2:27 am IST
பகிர்:

சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், கைதான இளநிலை உதவியாளா் தீபன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் தீபன் (40). இவரிடம் அதே அலுவலகத்தில் ஃபிட்டராக பணியாற்றி வரும் குழந்தைசாமி (59) சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் தடையில்லா சான்றிதழ் கோரி விண்ணப்பித்தாா். அப்போது, ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என தீபன் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் குழந்தைசாமி புகாா் செய்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்படி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்த தீபனிடம் வெள்ளிக்கிழமை லஞ்சப் பணமாக ரூ. 8 ஆயிரத்தை குழந்தைசாமி அளித்தாா்.

Advertisement

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான போலீஸாா் தீபனை கைது செய்தனா். தொடா்ந்து, தீபனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, கைதான தீபனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா்.