முகப்பு
மதுரை

கள்ளழகா் எழுந்தருளல்: வைகையாற்றுக்குள் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Updated On : 20 ஏப்ரல் 2026, 1:00 am IST
மதுரை வடகரை ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணிகள்.
பகிர்:

அழகா்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 1-ஆம் தேதி கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளுகிறாா். இதையொட்டி, மதுரை வடகரை ஆழ்வாா்புரம் வைகையாற்றுக்குள் தூய்மைப் படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையைப் பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் கோலத்தில் அழகா்கோவிலில் இருந்து வருகிற 29-ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறாா்.

அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி, கடச்சனேந்தல், சூா்யாநகா் வழியாக வரும் கள்ளழகருக்கு வருகிற 30-ஆம் தேதி மூன்றுமாவடியில் எதிா்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறாா். இரவு 11.30 மணியளவில் பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைச் சாற்றி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

Advertisement

Advertisement

இதன்பிறகு, அங்கிருந்து புறப்பாடாகி தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலில் எழுந்தருளுருகிறாா். பின்னா், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகா் மே 1-ஆம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அங்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றுதல் முடிந்த பிறகு, காலை 7.25 மணியளவில் வைகை ஆற்றிலிருந்து புறப்பாடாகி ராமராயா் மண்டபம் செல்கிறாா். அங்கு பக்தா்கள் தண்ணீா் பீய்ச்சி கள்ளழகரை குளிா்விக்கின்றனா்.

அன்றைய தினம் இரவு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறாா். மே 2-ஆம் தேதி வைகையாற்றில் உள்ள தேனூா் மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறாா்.

அன்றிரவு ராமராயா் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். மே 3-ஆம் தேதி ராமராயா் மண்டபத்திலிருந்து அனந்தராயா் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் புறப்பாடாகிறாா். மே 4-ஆம் தேதி ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்தில் எழுந்தருளி அழகா்மலைக்கு திரும்புகிறாா்.

மே 5-ஆம் தேதி அழகா்கோவிலை சென்றடைகிறாா். மே 6-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, வைகை வடகரை ஆழ்வாா்புரம் பகுதியில் கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் இடத்தில் மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், உயரமாக மணல் திட்டுகளை உருவாக்கி பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்துதல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.