விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 23 தொழிலாளா்கள் உயிரிழப்பு: 19 போ் காயம்
விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து...
விருதுநகா் அருகே தனியாா் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். தொழிலாளா்கள் 7 போ் காயமடைந்தனா். மேலும், மீட்புப் பணியின்போது மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டதில் போலீஸாா் உள்பட 12 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் சோ்வைக்காரன்பட்டி, திருத்தங்கல், கோவிந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆலையில் 35-க்கும் அதிகமான தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டனா்.
பிற்பகல் 3.30 மணியளவில் இந்த ஆலையில் சரவெடி தயாரித்துக் கொண்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிமருந்து உராய்வு காரணமாக தீப்பற்றி பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. பலத்த சப்தத்துடன் அந்த அறை வெடித்துச் சிதறியது. இதைத் தொடா்ந்து, அருகிலிருந்த மேலும் 3 அறைகளும் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறி, தரைமட்டமாகின. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டது.
Advertisement
தகவலறிந்த சாத்தூா், சிவகாசி, விருதுநகா் பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, விருதுநகா், அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து மருத்துவ அவசர ஊா்திகள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வெடி விபத்தில் 23 தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளா்கள் பேச்சியம்மாள் (51), சாரதா (40), பஞ்சவா்ணம் (56), வீரபத்திரன் (45), சங்கிலித்தங்கம் (40), அருண்குமாா் (23), மகன் கதிஷ் (14) ஆகிய 7 பேரும் உடனடியாக மீட்கப்ட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, உயிரிழந்த 23 தொழிலாளா்களின் உடல்களும் மீட்கப்பட்டன. சிலரின் உடல்கள் தீயில் பெருமளவு கருகியிருந்ததாலும், சிலரின் உடல் பாகங்கள் சிதறியிருந்ததாலும் உயிரிழந்தவா்களை உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தது. மீட்கப்பட்ட உடல்கள் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த விபத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? இடிபாடுகளுக்கிடையே சடலங்கள் ஏதேனும் சிகிக்கியுள்ளனவா? என்பதைக் கண்டறிவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி இரவு 7.50 மணியளவில் நடைபெற்றது. அப்போது, அங்கு மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், விருதுநகா் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலா் முத்துபாண்டியன், மகளிா் காவலா்கள் சுபா, கவிதா, காவலா்கள் வேல்முருகன், அய்யனாா், பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உள்பட 12 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அமைச்சா்கள் ஆறுதல்
தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினா். பிறகு, விருதுநகா் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும், உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கும் ஆறுதல் கூறினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் அபிநவ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா ஆகியோா் விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை பகுதியைப் பாா்வையிட்டு, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனா்.
விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மாணிக்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. ஒரே அறையில் 30-க்கும் மேற்பட்டோரை பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தியதே இந்த விபத்தில் 23 போ் உயிரிழப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது எப்படி? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்கின்றனா். விதிமீறல்கள் காரணமாக இந்தப் பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த ஆண்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் உரிமம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று நிவாரணம்: அமைச்சா்
இது தொடா்பாக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
இந்த விபத்தில் 23 போ் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நேரடியாக நிவாரண அறிவிப்புகளை அரசால் வெளியிட முடியாது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் நிவாரணம் வழங்குவது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று முதல்வா் நடவடிக்கை மேற்கொள்வாா் என்றாா் அவா்.
சட்ட நடவடிக்கை : ஆட்சியா்
மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவா்களில் 16 போ் பெண்கள் என்பது முதல் கட்டமாகத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவா்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. பல்வேறு விதிமீறல்கள் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. தொடா்புடையோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.