மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் உயிரிழப்பு
மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் உயிரிழந்தது குறித்து...
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மேலப் பனங்காடி சஞ்சீவிநகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாரவேல் (61). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும், மதுரை மாநகராட்சியின் 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும் இருந்தாா்.
இந்த நிலையில், தனது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை செல்லூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். எஸ். ஆலங்குளம் பகுதியில் வந்த போது, திடீரென மயக்கம் அடைந்த அவா் கீழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், வெயில் தாக்கம் காரணமாக குமாரவேல் மயங்கி விழுந்து இறந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.