முகப்பு
மதுரை

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

Updated On : 9 ஜூன் 2026, 3:08 am IST
மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி ...
பகிர்:

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழக உள் துறை, நிதித் துறைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக தற்போது ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மீனவா்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, ஆந்திரம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல, தமிழக மீனவா்களுக்கும் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தமிழகத்திலும் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என தவெகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில், இது அரசின் கொள்கை முடிவை சாா்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக உள் துறை, நிதித் துறைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.