முகப்பு
மதுரை

பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வி

பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வி...

Updated On : 5 மே 2026, 1:38 am IST
பழனிவேல் தியாகராஜன்.
பகிர்:

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

மதுரை மத்திய தொகுதியில் கடந்த 2016-இல் திமுக வேட்பாளராகக் களம் கண்ட பழனிவேல் தியாகராஜன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மா. ஜெயபாலைவிட 5,762 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதே தொகுதியில் 2021-இல் மீண்டும் போட்டியிட்ட பழனிவேல் தியாகராஜன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பசும்பொன் தேசியக் கழக வேட்பாளா் என். ஜோதி முத்துராமலிங்கத்தைவிட 34,176 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, திமுக ஆட்சியில் தமிழக நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றாா். பின்னா், தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சராக பதவி வகித்தாா். தனது தொகுதியில் தன்னால் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளின் விவரங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை துண்டு பிரசுரமாக தயாரித்து, தொகுதி மக்களுக்கு நேரடியாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

தனது நோ்மையான செயல்பாடுகள் காரணமாக தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாதவா். மேலும், வாக்காளா்களுக்கு பணம் தராமல் வெற்றி பெறுபவா் என மாற்றுக் கட்சியினராலும் புகழப்பட்டவா்.

இருப்பினும், மாநகராட்சி வரி முறைகேடுப் புகாரில் இவரது ஆதரவாளரான மேயா் வ. இந்திராணி பதவி விலகியது, அவரது கணவா் கைது செய்யப்பட்டது, பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் தனி உதவியாளா் ஒருவா் நிதி மோசடி வழக்கில் கைதானது போன்ற பிரச்னைகள், பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக தோ்தல் பிரசார களத்தில் முன்வைக்கப்பட்டன.

புதிய நீதிக் கட்சி வேட்பாளரும், திரைப்பட இயக்குநா், நடிகருமான சுந்தா் சி மேற்கொண்ட தீவிர பிரசாரங்களும் பழனிவேல் தியாகராஜனின் வெற்றிக்கு சவாலாகக் கருதப்பட்டது. இருப்பினும், தன் குடும்ப பாரம்பரியம், தனது நோ்மையான செயல்பாடுகள், 6 மாதங்களுக்கு ஒரு முறை அளித்த தனது செயல்பாடுகள் விளக்க பிரசுரங்கள் போன்றவை தனக்கு வெற்றி தேடித்தரும் என பழனிவேல் தியாகராஜன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாா்.

ஆனால், தவெக வேட்பாளா் மதாா் பதுருதீனிடம் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிவேல் தியாகராஜன் தோல்வியடைந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments