2021-இல் திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்தது என்ன?
தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவித்த நிலையில், 2021-இல் திமுக அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது நிதியமைச்சராகப் பதவியேற்ற பழனிவேல் தியாகராஜன் முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் நிதிநிலை மற்றும் கடன் சுமை தொடர்பாக 120 பக்கங்களைக் கொண்டவெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், வெள்ளை அறிக்கையின்படி, அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வருவாய் குறைந்து, வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் பொதுக் கடன் கணிசமாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2011-2012-இல் ரூ.1,15,412.38 கோடியாக இருந்த மொத்த நிலுவைக் கடன் அளவு 2021-22-ஆம் ஆண்டில் ரூ.5,70,189.29 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் கடன் அளவு ரூ. 4.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
மேலும், மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ.17,058 கோடியாக இருந்தது. இந்த வருவாய்ப் பற்றாக்குறை 2016-17 முதல் 2020-21 வரையிலான ஆட்சியில் ரூ.1,55,246 கோடியாக அதிகரித்தது எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, 2020-21 வரையிலான மின் துறையின் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் ரூ.82,916 கோடியாகவும், மின் துறையில் உள்ள நிலுவை கடன்கள் ரூ.1,59,668 கோடியாகவும் இருப்பதாகக் கூறினார்.
மேலும், போக்குவரத்துத் துறையில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் ரூ.4,642 கோடியாகவும், நிலுவை கடன்கள் ரூ.11,840 கோடியாகவும் உள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு வாங்கி இருக்கும் கடன்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக மட்டுமே செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.