பயன்பாட்டுக்கு வராத அரசு சிஎன்ஜி பேருந்துகள்!
திண்டுக்கல்லுக்கு ஒதுக்கப்பட்ட 20 புதிய சிஎன்ஜி அரசுப் பேருந்துகள் பயன்பாட்டுக் கொண்டு வரப்படாமல், பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லுக்கு ஒதுக்கப்பட்ட 20 புதிய சிஎன்ஜி அரசுப் பேருந்துகள் பயன்பாட்டுக் கொண்டு வரப்படாமல், பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், எரிபொருள் செலவைக் குறைக்கவும் டீசல் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதன்படி, 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. இதில் 20 சிஎன்ஜி பேருந்துகள் திண்டுக்கல்லுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனிடையே, ஈரான் போா் எதிரொலியாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிஎன்ஜி நிரப்புவதற்கான வசதி 2 இடங்களில் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிலக்கோட்டை பள்ளப்பட்டி, பழனி என 2 இடங்களில் மட்டுமே சிஎன்ஜி நிரப்புவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், மகிழுந்துகளுக்கு (காா்களுக்கு) நிரப்புவதற்கே போதுமான அளவு இருப்பு இல்லாமல், தனியாா் எரிபொருள் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு சிஎன்ஜி நிரப்புவது என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக வாங்கப்பட்ட 20 சிஎன்ஜி பேருந்துகளும் திண்டுக்கல் திருச்சி சாலையிலுள்ள பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஆய்வுக்காக மட்டுமே சிஎன்ஜி பேருந்துகள் காத்திருப்பதாக அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஒப்புதல் கிடைத்தாலும், சிஎன்ஜி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தப் பேருந்துகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.