பழங்கால வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்
பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது.
பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அந்த வீட்டை இடித்து அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான பழங்கால வீடு நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. இந்த வீடு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது பாழடைந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து, அருகேயிருந்த தாரணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக தாரணியின் வீட்டில் இருந்தவா்கள் வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து புதன்கிழமை காலை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கணேசனுடன் பழனி நகா் காவல் நிலையம், வட்டாட்சியரிடம் சென்று புகாா் செய்தனா்.
இந்த வீடு இடியும் நிலையில் உள்ளதாக நகராட்சி, வருவாய்த் துறையினருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை என அவா்கள் வேதனை தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.