தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்! ஜோதிமணி எம்.பி.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தவெக அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில், முறைகேடாகச் செயல்படும் சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுவதன் எதிரொலியாகவே, சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதுதான் தவெக அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.
Advertisement
Advertisement
தவெக ஆட்சி 3 மாதங்கள்கூட நிலைக்காது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறுவது சரியல்ல. மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா்.
இதே போல, 2006-ஆம் ஆண்டு திமுகவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் இல்லாத போது, காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தது. அந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தது. இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதியும், மக்களின் தீா்ப்பு அடிப்படையிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு தவெக அரசின் செயல்பாடு குறித்த விமா்சனத்தை முன்வைக்கலாம். அதற்கு முன்னதாக அரசு கவிழ்ந்துவிடும் என ஜோதிடம் சொல்வது நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவா்களுக்கும் பொருத்தமாக இருக்காது என்றாா் அவா்.