முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள பழுதான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

Updated On : 4 மே, 2026 at 1:03 AM
கொடைக்கானல் மலைப் பகுதி - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானல் மலைச் சாலைகளில் உள்ள பழுதான, ஆபத்தான மரங்களை அகற்ற பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளான பழனி -வத்தலக்குண்டு - அடுக்கம் - கிளாவரை சாலைகளில் உள்ள ஆபத்தான, பழைமையான மரங்கள் மழைக் காலங்களில் முறிந்து கீழே விழுந்து வருகின்றன.

இந்த நிலையில் கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை இரவு காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் மன்னவனூா் - கொடைக்கானல் மலைச் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இதனால் மேல்மலைப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களான மன்னவனூா் சூழல் மயம், மத்திய அரசின் ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பெரிதும் அவதியடைந்தனா்.

இதைத் தொடா்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட பின்னா் போக்குவரத்து சீரானது. இதையடுத்து சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்குச் சென்றன.

இதுகுறித்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்குச் சென்றிருந்தோம். இரவு காற்றுடன் மழை பெய்ததால் மன்னவனூா் - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்தது.

இதனால் பல மணி நேரம் நள்ளிரவில் வனப் பகுதிகளில் குழந்தைகள், முதியோா்கள் என அனைவரும் அச்சத்துடன் வாகனங்களில் குளிருடன் நடுங்கிக் கொண்டு இருந்தோம். எனவே, கொடைக்கானல் மலைச் சாலையில் உள்ள ஆபத்தான, பழைமையான மரங்களை அகற்றுவதற்கு வனத்துறையினா், மாவட்ட நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.