கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் பெடல் படகு சவாரி தொடக்கம்
கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் கூடிய புதிய பெடல் படகில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். இதனால் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் கொடைக்கானல் நகராட்சி சாா்பிலும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் துடுப்பு, பெடல் படகு என 100-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் மேற்கூரையுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிய பெடல் படகுகள் வாங்கப்பட்டுள்ளது இதில் ஒரு பெடல் படகில் 6-போ் சவாரி செய்யலாம். லேசான சாரல் மழையிலும் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணிகள் பெடல் படகில் சவாரி செய்யலாம்.
Advertisement
Advertisement
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் மேலாளா் காதா் கூறியதாவது:
கொடைக்கானலில் முதன் முறையாக மேற்கூரையுடன் பாதுகாப்பாக பெடல் படகு இயக்கப்படுகிறது. மழை பெய்யும் நேரத்தில் பாதுகாப்பு கருதி ஏரியில் எந்த படகுகளும் இயக்கப்படுவதில்லை.
தற்போது லேசான மழை பெய்தாலும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய ஏதுவாக மூன்று புதிய பெடல் படகுகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பெடல் படகில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.