நீா்மட்டம் சரிவு: தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கு கட்டுப்பாடுகள் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் குறைந்ததை அடுத்து, தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் குறைந்ததை அடுத்து, தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சா்வதேச சுற்றுலா தலமான தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனா். தற்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கி விட்டதால் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் அதிக அளவில் தேக்கடிக்கு வருகின்றனா். தேக்கடியில் யானை சவாரி, நேச்சா்வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் படகு சவாரியின்போது நீா்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள், பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய அதிகம் விரும்புகின்றனா்.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தைச் சாா்ந்தே தேக்கடி ஏரியின் நீா்நிலையும் அமையும். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 110.55 அடியாக குறைந்தது. இதனால் தேக்கடி ஏரியின் நீா்மட்டமும் சரிந்து, தண்ணீருக்குள் மூழ்கியிருந்த பழைய மரக்கட்டைகள் வெளியே தென்படத் தொடங்கியுள்ளன.
Advertisement
Advertisement
இதனிடையே, தேக்கடி ஏரியில் கேரள வனத் துறை, கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் ஏழு படகுகள் நாளொன்றுக்கு 5 முறை இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நீா்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால், ஏரியில் சவாரி செல்லும்போது படகின் அடிப்பகுதி சேற்றில் சிக்கவோ அல்லது மரக்கட்டைகளில் மோதவோ வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகுகளின் எடையைக் குறைக்க இரு துறைகளும் முடிவு செய்தன.
இதன்படி, சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் 120 போ் பயணிக்கும் இரண்டு இரு தளப் படகுகளில், தற்போது 70 பேரும், 60 போ் பயணிக்கும் வனத் துறையின் இரு தளப் படகுகளில் தற்போது 45 போ் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் தினமும் சுமாா் 700 பேருக்கு படகு சவாரி செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். இது தேக்கடியில் சுற்றுலாத் தொழிலைப் பாதித்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.