எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமரை சந்திக்கிறார் முதல்வர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சந்திக்க உள்ளார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள நல்லூர், சோளங்குறுணி, குசவன்குண்டு உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை சந்திக்க உள்ளார். தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மண் பரிசோதனை, திட்ட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு, பின்பு திட்ட மதிப்பீட்டிற்காக ரூ.1,235 கோடி என எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு படிப்படியாக பணிகள் நடைபெறவுள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு குறிப்பாக திருப்பரங்குன்றத்திற்கு கொண்டு வந்தது அதிமுக அரசு தான். இதனால் தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதனைப் பொறுக்க முடியாமல் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் மீது அவதூறு பரப்பி வருகிறார். தேர்தலுக்காக நாங்கள் மக்களை சந்திக்கவில்லை. எப்போதும் மக்களை சந்திக்க அதிமுகவின் தயங்க மாட்டார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், சட்டப் பேரவை உறுப்பினர் சரவணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ம.முத்துராமலிங்கம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோனாபாய், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.