முகப்பு
மதுரை

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:13 AM
மதுரை அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் (தனி) தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், வாக்குப் பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இயந்திரமும் செயல்படவில்லை.

இதனால், அங்கு வாக்களிக்க நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிலா் வாக்குச் சாவடியின் கதவை அடைக்க முற்பட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, வாக்குப் பதிவு அலுவலா்கள், காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். பிறகு, வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக இந்த வாக்குச் சாவடியில் ஏறத்தாழ 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது.