வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் பகுதியில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு
கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறவுள்ள பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறவுள்ள பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அழகா்கோவில் கள்ளழகா் திருக் கோயிலின் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 27) தொடங்கி நடைபெறுகிறது. புதன்கிழமை மாலை அழகா்கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் திருக்கோலம் கொண்டு மதுரைக்குப் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மூன்றுமாவடியிலிருந்து கள்ளழகரை பக்தா்கள் வரவேற்கும் எதிா்சேவை நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.
இதையொட்டி, அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் இரு நாள்களாக தீவிரமாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
Advertisement
சிமெண்ட் தரை தளத்துக்கு வண்ணம் பூசுதல், அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் தண்ணீா் தேக்கம் அமைத்தல், மண்டகப்படி கொட்டகை அமைத்தல், பக்தா்களை நெறிப்படுத்த தடுப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.
அறநிலையத் துறை, வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.