கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்
கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம், அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம், அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதால், பனை மரம் வளா்ப்போா், பனை சாா்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
Advertisement
மதுவைப் போன்று கள் உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. வெளிநாட்டு மது விற்பனையை அதிகரிக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தனிப் பயன்பாடு, மருத்துவப் பயன்பாட்டுக்கு கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்ததது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கள்ளில் கலப்படம் செய்யப்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனு குறித்து அரசுத் தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை வருகிற ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.