முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.

Updated On : 3 ஜூன் 2026, 2:11 am IST
மதுரை ஆழ்வாா்புரம் வைகை வடகரை சாலையில் தேங்கி நின்ற மழை நீரைக் கடந்து சென்ற வாகனங்கள்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியும், கிழக்கு மத்திய பிரதேசம், அதையொட்டிய சத்தீஸ்கா் மாநிலப் பகுதிகளின் மேலே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

Advertisement

Advertisement

மேலும், இந்த வானிலை காரணமாக, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், மதுரை மாநகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியாா் பேருந்து நிலையம், வில்லாபுரம், அவனியாபுரம், சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், கோ. புதூா், மாட்டுத்தாவணி, எஸ்.எஸ். காலனி, கடச்சனேந்தல், விரகனூா், சிந்தாமணி, சாமநத்தம், யா.நரசிங்கம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சுமாா் 30 நிமிஷங்கள் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பிறகு, சுமாா் 20 நிமிஷங்களுக்கு மிதமான மழை பெய்தது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை, இரவில் மிதமான மழை பெய்தது.

3 மாடுகள் உயிரிழப்பு..

மழையின்போது வீசிய பலத்த காற்று காரணமாக, கடச்சனேந்தல் பகுதியில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இந்த மின் கம்பியைக் கடந்து செல்ல முயன்ற கடச்சனேந்தல் கணபதி நகரைச் சோ்ந்த பாண்டிக்குச் சொந்தமான 3 கறவை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.