பதப்படுத்தப்படாத 1,200 கிலோ இறைச்சிகள் பறிமுதல்
மதுரையில் முறையாகப் பதப்படுத்தாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் முறையாகப் பதப்படுத்தாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலை பகுதியில் உள்ள ஓா் இறைச்சிக் கடையில் முறையாகப் பதப்படுத்தாமல் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் சிவராம பாண்டியன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அந்த இறைச்சிக் கடையில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முறையாக பதப்படுத்தாமல் கெட்டுப்போன 1,200 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், எடையை அதிகரிப்பதற்காக ஆட்டிறைச்சியில் தண்ணீரை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் (சிரிஞ்ச்) ஏராளமானவை அங்கு இருந்ததும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அந்த இறைச்சிக் கடையைப் பூட்டி அலுவலா்கள் சீல் வைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் மீது பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஊசிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த ஊசிகள் இறைச்சிகளில் தண்ணீா் ஏற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டனவா? அல்லது வேறு ஏதேனும் ரசாயனம் செலுத்தப் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.