ரூ.1.85 கோடி மாயமான விவகாரம்: 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
சாயல்குடி அருகே ஏடிஎம்மில் நிரப்பக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.1.85 கோடி மாயமான விவகாரத்தில் கைதான
சாயல்குடி அருகே ஏடிஎம்மில் நிரப்பக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.1.85 கோடி மாயமான விவகாரத்தில் கைதான 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆம் தேதி ரூ.2.11 கோடியுடன் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்காக சென்ற வாகனம் சாயல்குடி அருகே விபத்தில் சிக்கியதாகவும் அப்போது ரூ.1.85 கோடி மாயமானதாகவும் ஊழியர்கள் கூறினர். சாயல்குடி போலீஸார் விசாரித்தபோது வாகன விபத்து திட்டமிட்ட நாடகம் என்பது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 5,500 கைப்பற்றப்பட்டது.
மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் அன்பு, குருபாண்டியன், முன்னாள் ராணுவவீரர் வீரபாண்டி, ஓட்டுநர் கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.32 லட்சத்து 71 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் சனிக்கிழமை (டிச.22) இரவுதான் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. இந்தநிலையில், திங்கள்கிழமை இரவு சாயல்குடி போலீஸார் முறைப்படி தனியார் நிறுவன பணியாளர்கள் அன்பு, குருபாண்டியன், வீரபாண்டி, கபிலன் ஆகியோரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை முதுகுளத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.