கமுதி அருகே குடிநீரின்றி கிராம மக்கள் அவதி
கமுதி அருகே உள்ள கொல்லாங்குளத்தில் குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கமுதி அருகே உள்ள கொல்லாங்குளத்தில் குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கமுதி அருகே உள்ளது கொல்லங்குளம் கிராமம். இக்கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்கு சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்துக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 6 தரைத்தள தொட்டிகள் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக காவிரி குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களின் புழக்கத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்று வசதியுடன் கூடிய தொட்டியிலும் தண்ணீர் இல்லை. லட்சக்கணக்கில் அரசு நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் வெறும் காட்சிப் பொருளாக இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடையவைத்துள்ளது. தற்போது, கொல்லங்குளத்திலிருந்து கமுதி விலக்கு சாலைக்கு 2 கி.மீ. தூரம் பயணித்து தண்ணீர் கொண்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் தலையிட்டு கொல்லங்குளத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.