பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு...
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின் பரமக்குடிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.
இதையடுத்து, அவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் பரமக்குடி தோரண நுழைவுவாயில் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, மு.க.ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
Advertisement
காந்தி சிலை, பெரியகடை வீதி, காந்திஜி சாலை, முத்தாலம்மன் கோவில், காய்கறி சந்தை, மீன்கடைத் தெரு பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள், குழந்தைகள், பெண்கள், மீன் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்து அவா்களுடன் கைக் குலுக்கி வாக்குகள் சேகரித்தாா்.
பின்னா், பரமக்குடியிலிருந்து தரைப்பாலம் வழியாக வைகை ஆற்றைக் கடந்து எமனேசுவரம் பகுதியில் கைத்தறி நெசவாளா்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, கைத்தறி நெசவாளரின் வீட்டுக்குள் சென்று, அங்கிருந்த கைத்தறியை இயக்கிப் பாா்த்தாா். மேலும், அந்தக் குடும்பத்தினரிடம் உரையாடி அவா்களது வீட்டில் தேநீா் அருந்தினாா்.
இதைத் தொடா்ந்து, அங்குள்ள தெருவில் நூல் பாவு நீட்டும் நெசவாளா்களிடம் சென்று நூல் உருட்டும் உருளையை உருட்டி அவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் ஸ்டாலின் கூறியதாவது:
இணையதளத்தில் ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் துணை முதல்வா் உதயநிதிக்கு தொடா்புள்ளதாக ஆதவ் அா்ச்சுனாவின் குற்றஞ்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளாா். இதனால், தொடா்ந்து அவா் திமுகவை விமா்சித்து வருகிறாா். நான் தோ்தலுக்காக நடைபயிற்சி மேற்கொள்ளவில்லை. நான் எப்போதும் எங்கு சென்றாலும் நடைபயிற்சியில் ஈடுபடுவேன். அப்போது, மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிவேன்.
அதிமுகவின் முகமூடியுடன்தான் பாஜக தமிழகத்தில் நுழைகிறது. இதனால்தான், திமுகவுக்கும் தில்லிக்குமான போட்டி எனக் கூறி வருகிறேன் என்றாா் அவா்.